கனடாவில் நடைபெறவுள்ள பிஃபா (FIFA) உலகக்கிண்ணக் கால்பந்து போட்டிகளின் போது அமெரிக்க
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கமுகவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், கனடிய மண்ணில் தமக்கு எவ்விதமான சட்ட அமலாக்க அதிகாரமும் இல்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
கனடாவில் ஒட்டாவா, ரொறன்ரோ, வன்கூவர், கல்கரி மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் ICE அலுவலகங்கள் உள்ளன. அங்குள்ள எமது முகவர்கள் எவரும் துப்பாக்கிகளை (Firearms) வைத்திருப்பதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடிய மண்ணில் கைதுகளை மேற்கொள்வதற்கோ அல்லது தேடுதல் கட்டளைகளை (Search Warrants) நிறைவேற்றுவதற்கோ ICE முகவர்களுக்கு அதிகாரம் கிடையாது. “கனடாவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு கனடிய காவல்துறையினரே முழுப் பொறுப்பு” என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் ஊடகப் பேச்சாளர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ICE முகவர்கள் தற்போது போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான விசாரணைகளில் மட்டுமே கனடியப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மாநகர சபைகளின் தீர்மானம்: ரொறன்ரோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) மற்றும் வன்கூவர் மாநகர சபை உறுப்பினர்கள், உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ICE முகவர்கள் நகருக்குள் நுழைவதை எதிர்த்துத் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
சர்வதேச மன்னிப்புச்சபை எச்சரிக்கை: ICE முகவர்களின் வருகை புலம்பெயர்ந்த சமூகத்தினர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் (Chilling effect) நடுக்கத்தையும் உருவாக்கும் எனசர்வதேச மன்னிப்புச்சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, ICE காவலில் பலர் உயிரிழந்துள்ளதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2026 உலகக்கிண்ணப் போட்டிகளை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் கனடாவின் ரொறன்ரோ மற்றும் வன்கூவர் நகரங்களில் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது ICE பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தமையே தற்போது கனடாவிலும் இத்தகைய அச்சம் எழக் காரணமாகியுள்ளது.