கையொப்பங்களை சேகரிக்க இன்னும் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அல்பெர்டா சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் குடிமக்கள் முன்னெடுத்த மனு இயக்கத்திற்காக போதுமான கையொப்பங்களை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர். இந்த மனு வெற்றியடைந்தால், அல்பெர்டா கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து மாகாணம் முழுவதும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த இயக்கம் வெற்றி பெற்று, பொதுசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பிரிவினையை ஆதரித்தாலும் கூட, அது உடனடியாக சுதந்திரத்தை அர்த்தப்படுத்தாது என்று அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, ஒட்டாவா, பிற மாகாணங்கள் மற்றும் ஏனைய இன மக்களுடன் நீண்டதும் சிக்கலானதும் ஆன பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பேராசிரியரான எர்ரோல் மெண்டஸ் கூறுகையில், சுதந்திரத்திற்கு செல்லும் பாதையில் பல முக்கியமான சட்ட மற்றும் அரசியல் தடைகள் இருக்கும் எனத் தெரிவித்தார்.
“வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டாலும், அதன் ஆரம்ப தகுதித் தடைகளை கடந்து சென்றாலும் கூட, ஒவ்வொரு பேச்சுவார்த்தை கட்டத்திலும் அல்பெர்டா உண்மையில் ஒரு சுதந்திர நாடாக மாறுவது மிகவும் கடினமானதாக இருக்கும்,” என்று மெண்டஸ் கூறினார்.
1990களில் கியூபெக் சுயாட்சி வாக்கெடுப்புக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட கனடாவின் ‘கிளாரிட்டி சட்டம்’ படி, எந்த மாகாணமும் ஒருதலைப்பட்சமாக நாட்டை விட்டு பிரிய முடியாது.
அதற்கு பதிலாக, ஒரு பொதுச்சன வாக்கெடுப்பில் தெளிவான கேள்வியும் தெளிவான பெரும்பான்மை ஆதரவும் இருந்தால், கூட்டாட்சி அரசு அந்த மாகாணத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
அந்த பேச்சுவார்த்தைகள் ஒட்டாவாவை மட்டும் அல்லாது, பிற மாகாணங்களையும் தாயக இன மக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் அவர்களின் ஒப்பந்த உரிமைகள் கனடாவின் அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், லண்டனில் நடைபெற்ற சந்திப்பில் பல முதல் நாட்டு (First Nations) தலைவர்களும் அல்பெர்டாவின் பிரிவினை இயக்கம் குறித்து கிங் சார்ல்ஸுடன் சந்தித்து கவலை வெளியிட்டனர்.
மெண்டஸ் கூறுகையில், எதிர்கால பேச்சுவார்த்தைகள் ஓய்வூதியம் போன்ற பல சிக்கலான விடயங்களை உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.
“அல்பெர்டா ஓய்வூதிய நிதியை கனடா ஓய்வூதிய நிதியிலிருந்து எவ்வாறு பிரிப்பது என்பது மிகப்பெரிய விவாதமாக இருக்கும்,” என்றார்.
மேலும், இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் அவசியமாக தீர்வு காணப்பட வேண்டியவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.