சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் — அதிகரித்து வருவதாக ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் இளைஞர்கள் இந்தச் சம்பவங்களைச் செய்பவர்களாகவும், சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இளைஞர்கள் முதலில் பியர் ஸ்ப்ரேவை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை கண்டறிய விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் கூட்டங்களை ஏற்பாடு செய்து அதன் தீவிர விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இது உண்மையில் மிகவும் தீவிரமான விஷயம் என்று இன்ஸ்பெக்டர் ஃப்ராங்க் மிஸ்சியோன் தெரிவித்தார். பியர் ஸ்ப்ரே என்பது பெப்பர் ஸ்ப்ரே (Pepper Spray) போன்றதே; இது கண்களில் எரிச்சல், இருமல் மற்றும் சுவாசக் குறைபாடு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் கூறினார். கரடிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த ஸ்ப்ரேயில் காப்சைசின் (Capsaicin) என்ற இரசாயனப் பொருள் உள்ளது. இது மிளகாய் வகைகளில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். கரடி வாழும் பகுதிகளில் நடைபயணம் அல்லது முகாமிடும்போது இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பியர் ஸ்ப்ரே உயிருக்கு ஆபத்தான ஆயுதம் அல்லாததால், அதை ஒருவர்மீது பயன்படுத்துவது கத்தி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்குச் சமமானதாக சிறுவர்கள் கருதாமல் இருக்கலாம். ஆனால் அது “ஆயுதத்துடன் செய்யப்பட்ட தாக்குதல்” (assault with a weapon) போன்ற குற்றமாகவே கருதப்படும் என மிஸ்சியோன் கூறினார். “இதற்கு மிகவும் கடுமையான சட்ட விளைவுகள் இருக்கின்றன,” என்றும் அவர் எச்சரித்தார்.
குறைந்தபட்சம் 2024 முதல், இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பியர் ஸ்ப்ரே மூலம் தாக்கும் சம்பவங்கள் குறித்து ஹமில்டன் காவல்துறையினர் எச்சரித்து வந்துள்ளனர். பல நேரங்களில் இவை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு, இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலானவை பள்ளி நேரம் முடிந்த பிறகு பள்ளிகளுக்கு அருகிலுள்ள பொதுக் கூடங்களில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் சமீப காலங்களில், இவை பள்ளி வளாகங்களுக்குள் அல்லது பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறத் தொடங்கியுள்ளன என்பது பேசுபொருளாகியுள்ளது.
2021 முதல் 2025 வரை, பியர் ஸ்ப்ரே தொடர்பான சம்பவங்கள் 115 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹமில்டன் காவல்துறை சேவை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட சம்பவங்களில், 63 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் அதே வயது குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.