கனடாவின் ஓட்டாவா நகரில் உள்ள பிரபல்யமான பேஷோர் ஷொப்பிங் சென்டரில் (Bayshore Shopping Centre) இடம்பெற்ற துணிகர நகைக்கடை கொள்ளை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காணப் பொதுமக்கள் உதவியை ஓட்டாவா பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி காலை 9:40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி சந்தேக நபர் குறித்த விபரங்கள் வருமாறு:
தோற்றம்: சுமார் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பின இளைஞர்.
உடல் அமைப்பு: 59 முதல் 68 கிலோ எடை (130 – 150 lbs).
அடையாளம்: சம்பவத்தின் போது அவர் முன்பக்கத்தில் ‘Five Boroughs’ என வெள்ளை நிறத்தில் எழுதப்பட்ட பச்சை நிற ஹூடி (Hoodie) அணிந்திருந்தார். அத்துடன் பிரகாசமான நிறத்திலான கண்ணாடி மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்து பின்னால் ஒரு பையை (Backpack) மாட்டியிருந்தார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை இலகுவாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், உள்ளூர் இணைய விற்பனைத் தளங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நகைகள் விற்பனைக்கு வந்தால் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ அல்லது நகைகள் விற்பனை செய்யப்படுவது குறித்துத் தெரியவந்தாலோ, 613-236-1222 (எக்ஸ்டென்ஷன்: 5116) என்ற இலக்கத்தின் ஊடாக ஓட்டாவா பொலிஸ் கொள்ளை தடுப்புப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.