தென்மேற்கு ஒன்டாரியோவில் ஐந்து சிறு குழந்தைகள் பலியாவதற்குக் காரணமான கொடூரமான கார் விபத்து நடந்த இடத்தில், பொதுமக்கள் மலர்களையும் மென்மையான பொம்மைகளையும் (Stuffed animals) வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வாட்டர்லூவிற்கு வடக்கே உள்ள மேப்லடன் டவுன்ஷிப்பில் (Mapleton Township), போர்த் லைன் (4th Line) மற்றும் வெலிங்டன் ரோடு 12 சந்திப்பில், இவர்கள் பயணித்த வேன் ஒரு எஸ்யூவி (SUV) ரக காரோடு மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ஐந்து குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்த குழந்தைகள் 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தின் விபரங்களும் தற்போதைய நிலையும்
பாதிக்கப்பட்ட இந்த உடன்பிறந்தவர்களுடன் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து உறுப்பினர்களும் அந்த வேனில் பயணித்துள்ளனர். இதில் குழந்தைகளின் பெற்றோர், பாட்டி, 15 மாதக் குழந்தை மற்றும் மற்றொரு உறவினர் ஆகியோர் அடங்குவர். விபத்தில் பலத்த காயமடைந்த தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த 15 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ளது.
விபத்துக்குள்ளான குடும்பத்தினர் எல்மிரா (Elmira) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றொரு வாகனமான எஸ்யூவி காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் இரு கால்களும் உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
“முதலுதவி மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, பொதுமக்களில் சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்தனர். பொதுமக்களின் இந்த உதவிக்கு நாங்கள் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என ஒன்டாரியோ மாகாண காவல்துறையின் (OPP) கான்ஸ்டபிள் மேத்யூ பர்டன் (Matthew Burton) திங்கள்கிழமை சிடிவி (CTV) நியூஸ் ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
இவ்விபத்தைக் நேரில் கண்ட சாட்சிகள் எவரேனும் இருந்தால், அவர்கள் காவல்துறைக்குத் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
விபத்தில் உயிர் பிழைத்த பெரியவர்கள் குணமடைந்த பின்னர், அவர்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்றும் பர்டன் கூறினார்.
இதற்கிடையில், இந்த கோர விபத்தை நேரில் கையாண்ட முதலுதவி மீட்புக் குழுவினரும் மனரீதியாகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மேப்லடன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த குறைந்தது ஏழு தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
“எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகுந்த முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வதே எங்களது தற்போதைய முக்கிய நோக்கமாகும். எங்களது மீட்புக் குழுவினரின் மனநலன் சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் பின்னர் கவனிப்போம்,” என தீயணைப்புத் துறைத் தலைவர் கிரிஸ் ஹாரோ (Chris Harrow) விளக்கியுள்ளார்.
‘எங்கள் சமூகம் நெஞ்சம் உடைந்து போயுள்ளது’
விபத்து நடந்த புல்வெளியில் பூக்களும் பொம்மைகளும் குவிந்து வரும் நிலையில், உள்ளூர் தலைவர்கள் முதல் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
“இந்தக் கொடூரமான பேரிடரை எதிர்கொண்டுள்ள அந்த குடும்பத்தினருக்காகவும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காகவும் எனது மனம் உருகுகிறது. எல்மிரா மற்றும் மேப்லடன் பகுதி மக்களுடன் எனது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன், விபத்து நடந்தவுடன் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலுதவி மீட்புக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இதேபோன்ற உணர்வுகளை ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) அவர்களும் பகிர்ந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தனது பிரார்த்தனைகளை அவர் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள வூல்விச் டவுன்ஷிப்பின் மேயர் சாண்டி ஷாண்ட்ஸ் (Sandy Shantz) தனது ஆன்லைன் அறிக்கையில்:
“வெள்ளிக்கிழமை நடந்த இந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் பலியான சோகம் எங்கள் சமூகத்தையே உலுக்கியுள்ளதுடன், அனைவரது நெஞ்சங்களையும் உடைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமைக்கு (Privacy) அனைவரும் மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.