மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்று, அரச சேவைகள் அவர்களிடம் சரியாக சென்றடையாமையாகும். அரச சேவைகள் மக்களை சென்றடைய வேண்டுமாயின் முறையான நிர்வாக அதிகார பகிர்வு அவசியமாகும். ஆனால், மலையக தமிழர்கள் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில், பிரதேச செயலகங்கள் ஊடான நிர்வாக அதிகாரப் பகிர்வை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மலையக அரசியல் அரங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று நோர்வூட் நகரில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்வைக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள்:
ஹட்டனுக்கு மாற்றப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச செயலகம் மீண்டும் நோர்வூட்டிற்கே கொண்டு வரப்பட வேண்டும். நில்தண்டஹேனவில் அமைந்துள்ள புதிய பிரதேச செயலகம் ராகலை நகருக்கு மாற்றப்பட வேண்டும். ஹட்டன் நகரில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.
மஸ்கெலியாவில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.
அக்கரப்பத்தனையில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா, “தித்வா அனர்த்தத்தோடு அனர்த்தமாக, நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகருக்கு அபகரித்துக்கொண்ட அரசின் நடவடிக்கை, நுவரெலியாவில் பிரதேச செயலகங்கள் ஊடான நிர்வாக அதிகாரப் பகிர்வை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இத்தகைய பாரபட்சங்களுக்கு எதிராக ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க மலையக அரசியல் அரங்கம் முன்வந்துள்ளது,” எனத் தெரிவித்தார்.