குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான மேலதிக பரிசீலனையை ஜூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேமுறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் இலங்கைக்குள் எவ்வாறு செயற்பட்டது என்பதை விளக்கி நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.
39 இலங்கை பிரஜைகள் சிரியாவுக்குச் சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை விடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் தீவிரவாத சர்வதேச பயங்கரவாத சித்தாந்தம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். இருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர, இது குறித்து முறையான விசாரணைகளை நடத்தத் தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் ஈடுபாடு இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், மேலதிக விசாரணைகளுக்காக இன்டர்போல் (Interpol) உதவி போன்ற சர்வதேச ஆதரவுகள் கிடைக்கப் பெற்றிருந்தபோதிலும், அன்றைய குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் இந்த விசாரணையை கையாள்வதில் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சாட்டினார்.
மேலும், 2016 ஏப்ரல் 20 முதல் 2019 ஏப்ரல் 30 வரையான காலப்பகுதியில், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான மொத்தம் 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் நிலந்த ஜயவர்தனவினால் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசியில் இந்தத் தகவல்கள் அடங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் 129 நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இவ்வாறான தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அன்றைய குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரும், அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்னவும் அதற்குப் பொருத்தமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றை இலக்கு வைத்து சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களினால் திட்டமிடப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல்கள் மற்றும் லொறி தாக்குதல்கள் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் 2019 ஏப்ரல் 4 அன்று இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் சமர்ப்பித்தார். இந்தத் தாக்குதல்களில் பங்கேற்கவிருந்தவர்களின் பெயர்கள்கூட அந்தப் புலனாய்வுத் தகவல்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், எதிர்மனுதாரர்கள் தகுந்த விசாரணைகளை ஆரம்பிப்பதன் மூலம் இந்த எச்சரிக்கைகளை முறையாகப் பரிசீலிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விசாரணையோ அல்லது எந்தவொரு ஆணைக்குழுவின் அறிக்கையோ வெளிப்படுத்தவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் தலைமையிலான குழு பரிந்துரைத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, மனு தொடர்பான மேலதிக விவாதங்களை ஜூலை 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.