பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டார்.
பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
”ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்துள்ள தொடர் நடவடிக்கைகளுக்கு எதிராகவே மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற இந்த அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது புலனாய்வுத் துறையினரும் இராணுவத்தினரும் அச்சுறுத்தல்களை விடுத்து, அவர்களைக் காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சுதந்திரமாகப் போராட முடியாதவாறு ஒரு பந்தல் அமைக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 36 வருடங்களாகத் தங்கள் சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகியும், இராணுவ முகாம்களுக்கு அருகில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முழு முயற்சியாகும்.
இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாகக் கூறினாலும், களத்தில் நிலைமை வேறாக உள்ளது. எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தரத் தலையிட வேண்டும்.
தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிலான் மற்றும் மயிலிட்டி ஆகிய இடங்களில் மக்களின் இந்த நியாயமான போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என அவர் உறுதியாகத் தெரிவித்தார்