ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கும் ஈரானிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், இது இறுதியானது எனவும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானுடன் எந்தவிதமான வர்த்தகம் செய்தாலும், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் எச்சரித்துள்ளார்.
ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக இருக்கும் நாடுகள் இந்த வரி விதிப்பால் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடும்:
சீனா (ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி)
இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
துருக்கி
ஈராக்
இந்த வரி விதிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இந்தியாவைப் போன்ற நாடுகள் ஈரானிடமிருந்து மகு எண்ணெய் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே ரஷ்யா மீது ட்ரம்ப் விதித்த வரிகளால் உலகச் சந்தை தள்ளாடி வரும் நிலையில், ஈரானுடனான இந்த புதிய மோதல் மசகு எண்ணெய் விலையை மேலும் உயர்த்த வாய்ப்புள்ளது.
ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, பொருளாதார சிக்கலால் கடந்த டிசம்பர் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது ஆட்சிக்கு எதிரான பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.
இதுவரை சுமார் 500 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
ஈரானில் பணவீக்கம் 40%-க்கும் மேல் அதிகரித்துள்ளதால், சமையல் எண்ணெய், இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
தகவல் தொடர்பைத் துண்டிக்க ஈரான் அரசு கடந்த வியாழன் முதல் இணைய சேவையை முடக்கியுள்ளது.