இலங்கையில் மோசடி, ஊழல் மற்றும் வீணடிப்பு என்பவற்றை வேரோடு பிடுங்கி எறியும் நோக்குடன் உருவாக்கப்பட்ட லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை எக்காரணம் கொண்டுக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என தினன தகுண கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
தினன தகுண கூட்டிணைவின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, நதீஷ டி சில்வா மற்றும் ஊடகப் பேச்சாளர் துஷார வீரரத்ன ஆகியோர் நேற்று ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக இந்த ஆணைக்குழு மிகவும் சக்திவாய்ந்ததொரு நிறுவனமாக மாற்றப்பட்டது. எமது நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இருப்பினும், அண்மைக்காலமாக இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து சமூகத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் உருவாகி வருகின்றன. ஒரு சுயாதீன ஆணைக்குழுவுக்கு இத்தகைய நிலை ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல என்பது தினன தகுண கூட்டிணைவின் உறுதியான நம்பிக்கையாகும்.
ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் புகார்களை விசாரணை செய்யும் போது, அவை பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், நாட்டின் மிக முக்கியமான இந்த அரச நிறுவனத்தின் மீதான மக்கள் நம்பிக்கையும் அதன் நற்பெயரும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இந்த நிறுவனத்தின் கௌரவம், சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைமை ஆகியவற்றைப் பாதுகாப்பது அதன் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சகல அதிகாரிகளினதும் தார்மீகப் பொறுப்பாகும்.
விசாரணைகளுடன் தொடர்புடைய வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் போதோ அல்லது தரப்பினரை அழைக்கும் போதோ, அவை வெறும் ஊடக கண்காட்சிகளாக சில தரப்பினரால் சித்தரிக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது. அத்தகைய செயற்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையைச் சிறுமைப்படுத்தும். எனவே, ஆணைக்குழு தனது கடமைகளை முன்னெடுக்கும் போது சமூகத்தின் முன்னிலையில் அதன் சுயாதீனத்தன்மை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம் என வலியுறுத்தியுள்ளனர்.