இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்களைச் சர்வதேச நாணய நிதியம் (IMF) வரவேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது, வருமான முகாமைத்துவம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து IMF பிரதிநிதிகள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், சர்வதேச ரீதியில் நிலவும் பதற்றமான சூழல், குறிப்பாக மத்திய கிழக்கு மோதல்கள் இலங்கையின் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் அதேவேளை, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அழுத்தங்களைக் குறைத்து, சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார். திட்டமிட்டபடி 5-வது மற்றும் 6-வது மீளாய்வுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.