வடமாகாண கடற்தொழிலாளர்களின் விவகாரத்தில் அரசாங்கம் காட்டிவரும் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அரசுக்கு எதிரான ஒரு பாரிய மக்கள் போராட்டத்தை விரைவில் நடத்தவுள்ளதாகக் கடற்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கலந்துரையாடல்: தற்காலத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக தந்தை செல்வா அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
சங்கங்கள் கூட்டாக நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் சார்பில் கலந்துகொண்டிருந்த என்.எம்.ஆலம் மேலும் தெரிவிக்கையில், கடந்தகாலத்தில் எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படும்போது போராட்டங்களை நடத்தி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தோம். ஆனால், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களில் எந்தவொரு எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கவில்லை. காரணம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தோம்.
அந்த நம்பிக்கை இன்று மெல்ல மெல்ல மறையத் தொடங்கியிருக்கிறது.
லீற்றருக்கு 60 ரூபாய் விலையை அதிகரித்து அரசாங்கம் கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளது. அந்நாள் பாதிக்கப்பட்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு மானியம் அல்லது இழப்பீட்டினை வழங்கவேண்டும். அதே சமயம், கடற்றொழிலாளர்களுக்கு கடந்தகாலத்தில் இருந்த அதே பிரச்சினைகள் இன்றும் உள்ளன. அந்த பிரச்சினைகள் குறித்து காணும் விடயத்தில் ஆக மெத்தனப் போக்கை கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை கோரி மிகவிரைவில் வடமாகாணம் அல்லது வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் அரசுக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அந்த போராட்டத்தில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக கலந்துகொண்டு எங்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவேண்டும் என அழைக்கிறோம்.