ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலோன் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், ஜூரி உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை அறிவித்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ட்விட்டரின் போலி கணக்குகள் (Bots) குறித்த தரவுகள் மற்றும் 44 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இருந்து தாம் பின்வாங்கப் போவதாக மஸ்க் வெளியிட்ட கருத்துகள், திட்டமிட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருந்ததாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
மஸ்க்கின் இத்தகைய கருத்துகளால், ட்விட்டர் பங்கொன்றின் விலை சுமார் 3 டொலர் முதல் 8 டொலர் வரை செயற்கையாகக் குறைக்கப்பட்டதாக ஜூரி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த வழக்கைத் தொடர்ந்த பிரையன் பெல்கிரேவ் போன்ற சிறு முதலீட்டாளர்கள், மஸ்க்கின் ட்வீட்களை நம்பித் தமது பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்று நஷ்டமடைந்ததாகத் தெரிவித்தனர். “நான் ஏமாற்றப்பட்டேன்” என பெல்கிரேவ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பெரும் தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டிய நிலை மஸ்க்கிற்கு ஏற்பட்டுள்ளது.