ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் புதன்கிழமை (27) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைத் தங்கள் வசம் வைத்திருந்ததோடு, அவற்றுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ‘Like’ மற்றும் ‘Comments’ இட்டமை காரணமாகவே இந்த குழுவினர் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் 23 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் அம்பலாங்கொடை, மாரபன, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் இணைந்து அவர்களிடம் நீண்டநேர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.