மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நிலவும் மத்தி கிழக்கு போர்ச் சூழல் காணமாக உலக அளவில் குறிப்பாக வலுசக்தித் துறையிலேயே அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை இலங்கைப் நுகர்வோரும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு இரு வழிகள் உள்ளன. முதலாவது, உலக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளிலும் ஏற்ற இறக்கங்களை அனுமதிப்பது. அவ்வாறு அனுமதித்தால், தற்போதைய உலக சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது வழி, அரசாங்கத்திடம் தற்போது மீதமுள்ள சுமார் 900 பில்லியன் ரூபாய் நிதியைக் கொண்டு எரிபொருள் அல்லது பிற முக்கிய வலுசக்தி ஆதாரங்களுக்கு ஏதேனும் மானியம் வழங்குவது. இந்த இரண்டு தீர்வுகளில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அதன் சாதக, பாதக விளைவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். சந்தை விலைக்கு ஏற்ப உள்ளுர் விலையை மாற்ற அனுமதித்தால், வலுசக்திவிலை அதிகரிப்பு காரணமாக உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். சாதாரண மக்களுக்குப் புரியும்படி கூறினால், அரிசியில் தொடங்கி கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி வரை அனைத்தின் விலைகளும் வேகமாக உயரும்.
மறுபுறம், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்க முடிவு செய்தால் அதாவது சந்தை விலை அதிகரிக்கும் போது டீசலுக்கு 100 ரூபாயும், பெற்றோலுக்கு 20 ரூபாயும் அரசாங்கம் வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளதைப் போன்று செய்தால் நாம் சேமித்து வைத்துள்ள மீதமுள்ள பணம் செலவாகிவிடும். இதனால் மீண்டும் நாம் ஒரு சவாலான நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால், சந்தை விலைக்கு ஏற்ப விலைகளின் ஏற்ற இறக்கங்களை அனுமதிப்பதே சிறந்தது. ஆனால், ஏழை மக்களுக்கு அஸ்வெசும போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் மானியங்களை வழங்க வேண்டும். இவ்வாறு நேரடியாக ஏழை மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் சேமிப்புப் பணத்தில் சிறிய தொகையே செலவாகும். மாறாக, ஒட்டுமொத்த எரிபொருளுக்கும் மானியம் வழங்கினால், அந்தப் பணம் பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்கே செல்லும். ஏனெனில் அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்துபவர்கள் அந்தச் சுமையைத் தாங்கிக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள்தான்.
தற்போது சமையல் எரிவாயு விலை பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. உலக சந்தையில் நிலவும் போர்ச் சூழல் எரிவாயு உட்பட பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. அதற்கு ஏற்பவே இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும்.
அரசின் சேமிப்புப் பணத்தைக் கொண்டு விலையைக் குறைக்க முயன்றால், போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கணிக்க முடியாததால் நமது சேமிப்பு முழுவதும் தீர்ந்துவிடும். தற்போது போர் தொடங்கி இரண்டாவது கட்டத்தை எட்டி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதற்கு மேல் என்ன நடக்கும் என்று உலகத்திற்கே கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பொருட்கள், சேவைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும். உரங்களின் விலை அதிகரிப்பு அடுத்த போக விவசாய உற்பத்தியைப் பாதித்து, எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும்.
இந்தச் சூழல் நீடித்தால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும். கடந்த ஆண்டு நாம் ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருந்தோம். ஆனால் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் செலவு செய்வதைக் குறைப்பார்கள். ஒருவரின் செலவுதான் இன்னொருவரின் வருமானம் என்பதால், மக்களின் செலவு குறையும் போது பொருளாதாரம் மந்தமடையும்.
தற்போது உலக சந்தை நிலவரப்படி பார்த்தால், இலங்கையில் ஒரு லீட்டர் டீசலின் விலை 600 ரூபாயை அண்மிக்க வேண்டும். இந்த 600 ரூபாய் என்பது அரசாங்கம் விதிக்கும் வரிகள் மற்றும் குறிப்பிட்ட இலாப வீதம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும். ஆனால் தற்போதைய விற்பனை விலையைப் பார்க்கும்போது, வரிகள் அனைத்தையும் நீக்கினாலும் அரசாங்கம் நட்டத்திலேயே டீசலை விற்பனை செய்வது போலத் தோன்றுகிறது.
அண்மையில் பாகிஸ்தான் டீசல் விலையை அதிகரித்த போது அது இலங்கை நாணயப்படி சுமார் 600 ரூபாய் மட்டத்திலேயே இருந்தது. மேலும் இலங்கையில் உள்ள தனியார் எரிபொருள் நிறுவனங்கள் சுப்பர் டீசல் மற்றும் பிற வகை எரிபொருட்களை 600 ரூபாய்க்கும் அதிக விலையிலேயே விற்பனை செய்கின்றன. இதன் மூலம் உலக சந்தை நிலவரப்படி டீசலின் உண்மையான விலை 600 ரூபாய்க்கு மேல் என்பது உறுதியாகிறது.
டீசல் விலை அதிகரித்தால் அது பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், அரசாங்கம் தேவையில்லாமல் அனைத்து எரிபொருட்களுக்கும் முழுமையான மானியம் வழங்க முயன்றால் அது அதைவிடப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். ஏனெனில் அந்த மானியத்தை வழங்கும் அளவுக்கு நமக்குத் திறன் இல்லை. எனவே நுகர்வைக் கட்டுப்படுத்துவதே ஒரே வழியாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறையலாம். பெப்ரவரி மாதத்தில் மத்திய வங்கி தனது கையிருப்பை அதிகரிப்பதற்காக சந்தையிலிருந்து 400 மில்லியன் டொலர்களைப் பெற்றிருந்தது. இதனால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்தது. ஆனால் மார்ச் மாதத்தில் டொலர் தட்டுப்பாடு காரணமாக அவ்வாறு பெரிய அளவில் கையிருப்பு சேர்க்கப்படவில்லை.
டொலர்கள் வருவது குறைந்தால், டொலர் நுகர்வும் குறையும். அதாவது வெளிநாட்டிலிருந்து டொலர்கள் வராவிட்டால், இறக்குமதிப் பொருட்களை வாங்கும் அளவும் குறைந்துவிடும். அதிக விலைக்கு எரிபொருளை வாங்கி, அதே நேரம் தொழிலாளர் பண அனுப்புதல்களும் சுற்றுலாத்துறையும் குறைந்தால் அது யாருக்கும் நல்லதல்ல. அது மக்களின் வருமான மட்டத்தைக் குறைத்துவிடும். இந்த பொருளாதார அதிர்ச்சி மேலும் நீடித்தால் எமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் பாதிப்புகள் ஏற்படும். கடன் செலுத்தும் திறன் என்பது போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே அமையும்.
தற்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தப் போர் மூன்றாவது கட்டத்திற்குச் சென்று இன்னும் மூன்று மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் எனத் தெரிந்தால், நாணய நிதியத்துடனான தற்போதைய ஒப்பந்தத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டி வரும். தற்போது நாம் விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணையைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். போர் மேலும் நீடிக்கும் எனத் தெரிந்தால், அதற்கேற்ப முன்கூட்டியே தயாராவதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும் என்றார்.