அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் விவகாரத்தில், அரசு அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை எனத் தையிட்டி காணி உரிமையாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் கூட்டங்களின் விபரங்களை மறைப்பதாகவும், சட்ட ரீதியான உறுதிமொழிகளை வழங்கத் தயங்குவதாகவும் காணி உரிமையாளர்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
காணிகளை விடுவிப்பது தொடர்பாகத் திட்டமிடுவதற்கு நடத்தப்படும் கூட்டங்களுக்குக் காணி உரிமையாளர்கள் அழைக்கப்படுவதில்லை. அக்கூட்டங்களின் அறிக்கைகளைக் கேட்டால் வழங்கப்படுவதில்லை எனவும், அண்மையில் நடந்த கூட்டத்தையே “அது ஒரு கலந்துரையாடல் மட்டுமே” எனக் கூறி அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காணி அளவீடு செய்யவிருந்த நாளில் விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதி தங்கியிருந்தமை தமக்கு மிகுந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
காணி அளவீட்டின் நோக்கம் காணி விடுவிப்புதான் என்பதை மாவட்டச் செயலரோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரோ தமது அலுவலகக் கடிதத் தலைப்பில் (Official Letterhead) உறுதிப்பட எழுதித் தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது.
அதிகாரிகள் வழங்க முன்வந்த சாதாரணக் கடிதங்கள் எவ்விதத் திணைக்களக் கோவைக்குள்ளும் (Files) ஆவணமாக இருக்காது. அதிகாரப்பூர்வத் தொடர் இலக்கத்துடன் கூடிய கடிதம் வழங்கப்பட்டால் மட்டுமே அது எதிர்காலத்தில் சட்ட ரீதியான ஆவணமாக இருக்கும் என உரிமையாளர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்தனர்.
காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என்பது அதிகாரிகளுக்கே தெரியாது என்பதால்தான், அவர்கள் கடிதத் தலைப்பில் உறுதிமொழி தர மறுக்கிறார்கள் எனத் தையிட்டி மக்கள் கருதுகின்றனர். சட்ட ரீதியான ஆவணம் இன்றித் தமது பூர்வீக நிலங்களை அளக்க அனுமதிப்பது தமக்கு இழைக்கப்படும் அநீதி என அவர்கள் சுட்டிக்காட்டினர்.