தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் முதலீட்டுப் பயணம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக லண்டன் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நேற்று சென்னைக்குத் திரும்பினார்.
இந்தப் பயணத்தின் மூலம் சுமார் 15,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டி.ஆர்.பி. ராஜா, லண்டன் பயணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பாக மேலும் வெளிப்படையான தகவல்களை அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படும் நிறுவனத்தின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதா என்பது குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் முதலீடுகளும் இந்தப் பயணத்தின் மூலம் புதிதாக ஈர்க்கப்பட்ட முதலீடுகளாக அறிவிக்கப்படுகிறதா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், லண்டன் பயணத்தின்போது முதலமைச்சர் விஜய் வெளிநாடுவாழ் தமிழர்களை சந்திக்காதது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படாதது, தொழில்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை செயலாளர் ஆகியோர் பயணத்தில் இடம்பெறாதது உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், ரீல்ஸ் வெளியிடுவதற்காகவே முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றாரா என்ற தோற்றம் ஏற்படுவதாகவும், முதலீட்டுப் பயணத்தின்போது ரீல்ஸ் மட்டுமே வந்ததாகவும், முதலீடுகள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை என்றும் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார்.
எனினும், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, லண்டன் பயணத்தின்போது ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், லண்டன் பயணம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ள முதலீட்டு விவரங்களுக்கும், டி.ஆர்.பி. ராஜா முன்வைத்துள்ள கேள்விகளுக்கும் இடையே அரசியல் விவாதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.