நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.