மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் பெர்த் நகருக்கு அருகே அமைந்த புகழ்பெற்ற சோரெண்டோ கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு வந்த சுறா மீன் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான நபரை மீட்கவும், தாக்குதல் நடத்திய சுறாவைக் கண்டறியவும் காவல்துறையினர் உடனடியாகக் விரைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியிலுள்ள கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளன.
மேலும், காவல்துறையின் சிறப்புப் படகுகள் மற்றும் உலங்கு வானுார்திகள் மூலம் அந்த பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், தாக்குதல் நடத்திய சுறாவின் இனம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.