அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அச்சட்டமூலத்தின் ஏற்பாடுகள் மக்களின் இறைமையையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ மீறவில்லை என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் திருத்தத்திற்குப் பொது மக்கள் வாக்கெடுப்பு (Referendum) ஒன்றின் ஒப்புதல் தேவையில்லை என்றும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற நடைமுறை மூலமாக அதனை நிறைவேற்ற முடியும் எனத் தீர்மானிக்குமாறு நிபுணஆராச்சி உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
குறித்த திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவகாரங்கள் உயர் நீதிமன்றத்தில் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் அரசியலமைப்பைக் கேள்விக்குள்ளாக் கும் வகையில் குறைந்தது 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுடன் முன்னோக்கிச் செல்லத் தயாராக இருப்பதாகவும், பொது வாக்கெடுப்புத் தேவையா என்பது குறித்து உயர் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு வழிகாட்டலையும் பின்பற்றுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்துடன் தொடர்வதற்கு முன்னர், சட்டமூலத்தைச் சவாலுக்குட்படுத்தும் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.