சாஸ்கடூன் (Saskatoon): சாஸ்கடூன் நகரில் இடம்பெற்ற தீ விபத்தொன்றின் போது, உடனடியாகச் செயற்பட்டு அண்டை வீட்டிலிருந்த பெண்ணையும் அவரது 91 வயது தாயாரையும் காப்பாற்றிய 7 வயது சிறுவனின் தைரியத்தைப் பாராட்டி கௌரவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி மாலை 7.00 மணியளவில், சாஸ்கடூனின் மேஃபேர் (Mayfair) பகுதியிலுள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்புற முன்றலில் விளையாடிக் கொண்டிருந்த ‘ஜேஸ்’ (Jayce) என்ற 7 வயது சிறுவன், பக்கத்து வீட்டில் தீப்பிடிப்பதைக் கண்டு உடனடியாக மற்றுமொரு நபரின் உதவியுடன் 911 அவசர இலக்கத்திற்குத் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
பின்னர், விரைவாகச் செயற்பட்ட சிறுவன், இரண்டு வீடுகள் தள்ளியிருந்த தனது அண்டை வீட்டாருக்குத் தீப்பரவல் குறித்து எச்சரிப்பதற்காக ஓடிச் சென்றுள்ளான்.
“நானும் எனது சகோதரனும் தீப்பிடிப்பதை ஒன்றாகப் பார்த்தோம். உடனடியாகச் சென்று அண்டை வீட்டுப் பெண்ணிடம் விஷயம் தெரிவித்தேன்” என அச்சிறுவன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளான்.
சிறுவனின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது அண்டை வீட்டாரான கோனி சீபல் (Connie Seibel) மற்றும் இயக்கம் குறைந்த நிலைமையிலிருந்த அவரது 91 வயது தாயார் ஆகியோர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பக்கத்து வீடு காலியாக இருந்தபோதிலும், தீயின் சுவாலைகள் பின்னர் கோனி சீபலின் வீட்டிற்கும் பரவியுள்ளது. சிறுவன் ஜேஸின் சுதாகரிப்பான செயற்பாடே இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளதாகப் பிரதேசவாசிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தால் சேதமடைந்த தனது வீட்டிற்கு காப்பீடு (Insurance) எதுவும் இல்லாததால், கோனி சீபலுக்கு உதவும் வகையில் பிரதேசவாசி ஒருவரால் நிதியுதவிப் பிரசாரமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தீயணைப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.