யாழ்ப்பாணம், ஜூலை 23: இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு (Genocide) உட்படுத்தப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் (EU) உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை (International Investigation Mechanism) உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழித் தளத்திற்கு புதன்கிழமை (ஜூலை 22) விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவை நேரில் சந்தித்த வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பினர், இக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் ஏமாற்றமளிக்கிறது: ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ‘வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின்’ தலைவி யோகராசா கனகரஞ்சினி;
“எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் எனத் தூதுக்குழுவினர் உறுதியளித்த போதிலும், அவர்களின் பதில் எமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்தாக வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் சர்வதேச நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பொறிமுறைகளுக்குக் கடும் எதிர்ப்பு: காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படும் எந்தவொரு உள்நாட்டுப் விசாரணைப் பொறிமுறையையும் அல்லது இழப்பீடுகளையும் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
குற்றங்களை இழைத்த அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்றும், இதுவரை 450க்கும் மேற்பட்ட போராடிய பெற்றோர்கள் நீதிகிடைக்காமலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றமிழைத்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி: தற்போதைய நிலவரம்
அகழ்வாராய்ச்சி நாட்கள்: நீதிமன்ற உத்தரவிற்கமைய 3 கட்டங்களாக 92 நாட்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்: இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 440 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
சிறப்பு விபரங்கள்: மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எச்சங்களும், அவர்களின் பாடசாலைப் பைகள் மற்றும் ஆடைகளும் அடங்குகின்றன.
2017 பிப்ரவரி முதல் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் சுழற்சிமுறைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகின் மிக நீண்ட போராட்டங்களில் ஒன்றாக இது தொடரும் போதிலும், அவர்களின் பிரதான கோரிக்கைகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது