கடந்த மாதம் நபர் ஒருவர் படுகாயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு ஆண்களை லண்டன் (London) நகர காவல்துறை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த மே 28 அன்று அதிகாலை 3 மணியளவில் ‘வோர்ன்க்ளிஃப் வீதி வடக்கு மற்றும் பிளாக்ஃப்ரையர்ஸ் ஸ்ட்ரீட்’ (Wharncliffe Road North and Blackfriars Street) சந்திப்பிற்கு அருகே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு துப்பாக்கிக் காயத்துடன் காணப்பட்ட நபர் ஒருவர், உயிருக்கு ஆபத்தில்லாத தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணையைத் தொடர்ந்து, டொராண்டோவைச் சேர்ந்த கரீம் அலெய்ன் (Khareem Alleyne – 27) மற்றும் ஸ்காபரோவைச் சேர்ந்த ஜஹ்க்வோன் ஜஹ்சியா லாமண்ட் (Jahquon Jahzia Lamont – 19) ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இவ்விருவரும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தமை, ஒழுங்குமுறைக்கு உட்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அலட்சியமாகப் பாதுகாத்து வைத்திருந்தமை உட்படத் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவற்றுடன் கூடுதலாக, கரீம் அலெய்ன் மீது கடுமையான தாக்குதல் (Aggravated assault), காயப்படுத்தும் அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டமை மற்றும் தடை உத்தரவை மீறி துப்பாக்கி அல்லது வெடிமருந்துகளை வைத்திருந்தமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். லாமண்ட் ஜூன் 29 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த அதேவேளை, அலெய்ன் ஜூலை 3 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான தகவல்கள் அல்லது வீடியோ பதிவுகள் (Video footage) வைத்திருக்கும் எவரும் 519-661-5670 என்ற எண்ணில் லண்டன் காவல்துறையையோ அல்லது 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்றே கருதப்படுவர்.