இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் இயங்கிவரும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற்றுக்கும் இடையே கடந்த வியாழனன்று (25) கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அறியமுடிகிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய வாக்குறுதிகளை வழங்கியிருந்த பின்னணியில், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஈடுபட்டு வருகிறது.
அதற்கமைய தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பங்கேற்புடன் கடந்த மார்ச் 2, ஏப்ரல் 9 மற்றும் மே 6 ஆகிய திகதிகளில் சந்திப்புக்கள் நடைபெற்றதுடன், முக்கிய சில இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் சுவிஸ் தூதுவர் சிறி வோல்ற்றை சந்தித்திருக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் உறுப்பினர்கள், தமது முயற்சிகள் உள்ளிட்ட சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க தமிழ்த்தேசியக் கட்சிகளுடனான அடுத்த சந்திப்பை கடந்த 11 ஆம் திகதி நடாத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உத்தேசித்திருந்த போதிலும், அன்றைய தினத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அச்சந்திப்பு நடாத்தப்படவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது