ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முட்டாள்தனமாக மீறியுள்ளதாக” டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவம் ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று ‘ஒன்-வே’ ரக தற்கொலைத் தாக்குதல் ட்ரோன் (One-way attack drone) மூலம் இந்தச் சரக்குக் கப்பல் தாக்கப்பட்டபோது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாலுமிகளைத் திட்டமிட்டு வெளியேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் (Missile and drone storage facilities) மற்றும் கடலோர ரேடார் நிலைகள் மீது வெள்ளிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command – Centcom) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா இந்தத் தாக்குதலை அறிவிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஈரான் மீது அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நீங்கள் பார்ப்பீர்கள்” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) இந்தத் தாக்குதலை, ட்ரோன் தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட “ஒரு சக்திவாய்ந்த பதில்” என்று விவரித்துள்ளது.
“வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் நடத்திய தேவையற்ற ஆக்கிரமிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தெளிவாக மீறியுள்ளது” என்று சென்ட்காம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மேலும், முக்கிய சர்வதேச வர்த்தகப் பாதையின் வழியே வணிகப் போக்குவரத்து அதிகரித்து வரும் வேளையில், ஈரானின் இந்த அபாயகரமான நடத்தை கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைக் (Freedom of navigation) குலைப்பதாக உள்ளது.”
ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை ஒருங்கிணைப்பதையும் ஆதரவையும் அமெரிக்க ராணுவம் “தொடர்ந்து வழங்கும்” என்றும் சென்ட்காம் கூறியுள்ளது.
தற்போதைக்கு, அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஒருமுறை மட்டும் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலா அல்லது ஒரு பெரிய தொடர்ச்சியான பதிலடியின் பகுதியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில்: “ஒப்பந்தங்களை மீறும் அமெரிக்க ஆட்சி, வழக்கம் போல் தனது கடமைகளை மீறி, ஹார்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதையில் கப்பல் சென்றதாக பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி இஸ்லாமிய குடியரசான ஈரானின் கடலோரப் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது” என்று சாடியுள்ளது.
அத்துடன், “இந்த ஆக்கிரமிப்பு மீண்டும் தொடர்ந்தால், எங்களின் பதிலடி இதைவிட மிக விரிவானதாக இருக்கும்” என்றும் அது எச்சரித்துள்ளது.
மேலும், லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும் IRGC குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலும் லெபனானும் வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனில் ஒரு அமைதித் திட்டத்திற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சமயத்திலேயே இந்தத் தாக்குதல்களும் நடந்துள்ளன. ஏற்கனவே போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே அண்மைக் காலமாக வரையறுக்கப்பட்ட அளவிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, டெஹ்ரான் (ஈரான் அரசு) இந்த முக்கிய நீரிணையை மூடியது.
எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான இந்த முக்கியமான கடல்வழிப் பாதை மூடப்பட்டதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், உரம் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
இதனையடுத்து, ஜூன் 17 அன்று அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) கீழ் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம், “60 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் தனது முழு முயற்சியைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் கோரியிருந்தது.
அமெரிக்காவின் இந்த பதிலடித் தாக்குதலுக்குப் பிறகு, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து ஈரானுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசியை எடுத்துப் பேசலாம். ஆனால் வன்முறைக்கு வன்முறையால்தான் பதிலடி கொடுக்கப்படும்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இப்ராகிம் அசிசி சமூக ஊடகங்களில் கூறுகையில், அமெரிக்கா “மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்: “போர்நிறுத்தத்தை இவாறு பொறுப்பற்ற முறையில் மீறுவது வழக்கம் போல் அவர்களின் பக்கமே பின்னடைவையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும். இந்த பழிபோடும் விளையாட்டு இனி வேலை செய்யாது,” என்றார்.
வெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும் அல்லது போர்நிறுத்தம் இன்னும் நீடிக்கிறதா என்று அவர் கருதுகிறாரா என்ற கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“நீங்கள் அதைத் தெரிந்துகொள்வீர்கள்,” என்று கூறிய அவர், “அவர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அதைச் செய்திருக்கக் கூடாது,” என்றார்.
ஈரான் ஏன் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது என்று நீங்கள் கருதுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, டிரம்ப் சுருக்கமாக “அவர்கள் சற்று வித்தியாசமானவர்கள்” என்று மட்டும் கூறினார்.
சமீபத்திய நாட்களில், டிரம்ப் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக வலியுறுத்தி வந்தனர். ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் (Toll) விதிக்கும் எந்தவொரு யோசனையையும் ஈரான் கைவிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த புதன்கிழமையன்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பதிவில், “கப்பல்களுக்கு எவ்வித கட்டணங்களோ, காப்பீட்டுச் செலவுகளோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களோ கோரப்படாது அல்லது பெறப்படாது” என்று ஈரான் அமெரிக்காவிற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். “இந்தத் தகவல் தவறானது எனத் தெரியவந்தால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும்,” என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
நீரிணை வழியாகச் செல்லும் டேங்கர் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதாக வரும் அறிக்கைகளை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன், இத்தகைய கட்டண முறையானது சர்வதேச கடல்சார் சட்டத்திற்கு எதிரானது என்றும் பல நாடுகள் கருதுகின்றன.
செவ்வாய்க்கிழமையன்று, ஈரானிய மற்றும் ஓமானிய அதிகாரிகள் ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் சந்தித்து “கடல்வழிப் போக்குவரத்தின் எதிர்கால மேலாண்மை” குறித்து விவாதித்தனர். ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி இரு நாடுகளும் “கட்டணமில்லா பாதுகாப்பான போக்குவரத்திற்கு” கட்டுப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப், அரசு சார்பு ஊடகங்களிடம் பேசுகையில், “ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகம் இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வியாழக்கிழமையன்று தாக்குதலுக்குள்ளான அந்தச் சரக்குக் கப்பல், சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘எவர் லவ்லி’ (Ever Lovely) என்ற கப்பலாகும்.
பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு முகமையான UKMTO இன் படி, ஓமனின் தஹித் (Dahit) துறைமுகத்திற்கு தென்கிழக்கே 7.5 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் தாக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான போது ‘எவர் லவ்லி’ கப்பல், UKMTO பரிந்துரைத்த பாதையையே பின்பற்றிச் சென்றதாகக் கப்பலின் உரிமையாளரான எவர்கிரீன் (Evergreen) நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கப்பலின் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; அதேபோல் கப்பலுக்கும் அதன் சரக்குகளுக்கும் எந்தச் சேதமும் இல்லை,” என்று அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, போர் வெடித்ததில் இருந்து இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையில் சிக்கித்தவிக்கும் 11,000 க்கும் மேற்பட்ட மாலுமிகளை வெளியேற்றும் தனது திட்டமிட்ட பணியை ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.