டொராண்டோ காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் (U.S. Consulate) நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய சோதனை ஆணை (search warrant) ஒன்றைச் செயல்படுத்த, காவல்துறை அதிகாரி மார்க் பினிசோட்டோ (Marc Pinizzotto) மற்றும் அவசரக்கால பணிக்குழுவின் (ETF) உறுப்பினர்கள் சென்றிருந்த போதே அவர் சுடப்பட்டதாகக் காவல்துறை அதிபர் மைரன் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.
பிளாக் கிரீக் மற்றும் ட்ரெதேவி வீதிகளுக்கு அருகில் உள்ள சம்பவ இடத்திலிருந்து பினிசோட்டோ அவசரமாக சன்னிப்ரூக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

43 வயதான இந்த அதிகாரி டொராண்டோ காவல்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றினார், அதில் ஐந்து ஆண்டுகள் அவசரக்கால பணிக்குழுவின் (ETF) உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினிசோட்டோவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றன. முக்கியப் பிரமுகர்கள் கூறியவை இதோ:
‘காவல்துறையினர் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் அபாயங்களை நினைவூட்டுகிறது’: பிரீமியர் ஃபோர்ட்
ஒன்டாரியோ பிரீமியர் டக் ஃபோர்ட், ஒன்டாரியோ மக்களின் சார்பில் பினிசோட்டோவின் குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் மற்றும் சக காவல்துறை ஊழியர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
“நமது மாகாணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒன்டாரியோ முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் அபாயங்களை இன்றைய நாள் நமக்கு நினைவூட்டுகிறது,” என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இந்த நகரத்திற்கு இது ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி’: மேயர் சௌ
டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ, காவல்துறை அதிபர் டெம்கிவ் உடன் இணைந்து சன்னிப்ரூக் மருத்துவமனைக்கு வெளியே பேசுகையில், ஒரு காவல்துறை அதிகாரியின் மரணம் “இந்த நகரத்திற்கு ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி” என்று கூறினார்.
“அவரது குடும்பத்தினர், அன்பானவர்கள் மற்றும் சக ஊழியர்களின் வலியைத் தணிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த ஆழமான இழப்பை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் எங்களது பிரார்த்தனைகளில் இருக்கிறார்கள்,” என்று கூறிய அவர், பினிசோட்டோவின் தாயாரை தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
“அவர்களது துயரம் இந்த நகரம் முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஆபத்தை அறிந்து, மற்றவர்களைப் பாதுகாக்கத் தங்களைத் தாங்களே ஆபத்தில் ஈடுபடுத்திக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள், இன்றைய நாள் அந்தத் தியாகத்தின் கொடூரமான நினைவூட்டலாகும்.”
‘ஆழமான மற்றும் கடுமையான துயரம்’: காவல்துறை அதிபர் டெம்கிவ்
டெம்கிவ், பினிசோட்டோவின் மரணச் செய்தியை “ஆழமான மற்றும் கடுமையான துயரத்துடன்” உறுதிப்படுத்தியதுடன், அதிகாரியின் குடும்பத்தினருக்கு அவரே நேரில் சென்று இந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்ததாகக் கூறினார்.
“அவர்கள் உணரும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது… இன்று அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மார்க்கின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
‘இதயத்தை உடைக்கும் சோகம்’: டொராண்டோ காவல்துறை சங்கத் தலைவர்
டொராண்டோ காவல்துறை சங்கத்தின் தலைவர் கிளேட்டன் காம்ப்பெல், வியாழக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டை ஒரு “பேரவலம்” என்று அழைத்ததுடன், அவரது குடும்பத்தினர் “நிலைகுலைந்து போய்விட்டதாகக்” கூறினார்.
“அவர் தனது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக வீடு திரும்பியிருக்க வேண்டும். எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணைய வைக்கிறார்கள், மார்க் தனது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக வீடு திரும்பாதது ஒரு பெரிய சோகமாகும்,” என்று அவர் கூறினார்.
‘ஆழ்ந்த இரங்கல்கள்’: பியர் பொய்லிவ்ரே
அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பினிசோட்டோவின் அன்பானவர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் தனது “ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்துள்ளார்.
“இன்று எனது எண்ணங்கள் அவர்களுடனும், கனடியர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகத் தங்களைத் சுயநலமின்றி ஆபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் சீருடை அணிந்த அனைத்து அதிகாரிகளுடனும் உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.