கனடாவின் 31ஆவது கவர்னர் ஜெனரலாக (Governor General) முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) பதவியேற்கும் விழா, 21 குண்டுகள் முழங்கும் மரியாதை, கவிதை வாசிப்பு மற்றும் கனேடிய கலைஞர்களின் இரண்டு இசை நிகழ்ச்சிகளுடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
2021ஆம் ஆண்டில் கனடாவின் முதலாவது பூர்வகுடிப் (Indigenous) பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் பதவியேற்ற மேரி சைமனுக்கு (Mary Simon) பதிலாக லூயிஸ் ஆர்பர் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
கனடா செனட் (Senate) கட்டிடத்தில் நடைபெறும் இந்த விழா, காலை 10 மணியளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மேரி சைமன், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), தலைமை நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர் (Richard Wagner), நாடாளுமன்ற சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா (Francis Scarpaleggia) மற்றும் ‘அசெம்பிளி ஆஃப் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ்’ அமைப்பின் தேசியத் தலைவரான சிண்டி வுட்ஹவுஸ் நெபினாக் (Cindy Woodhouse Nepinak) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
விழா தொடங்குவதற்கு முன்பாக, இன்யூட் (Inuit) சமூகத்தைச் சேர்ந்த மூத்தவர் ஒருவரால் ‘குல்லிக்’ (qulliq – பாரம்பரிய இன்யூட் எண்ணெய் விளக்கு) ஏற்றப்பட்டு, விழா முழுவதும் அது தொடர்ந்து எரியும்.
இந்த நிகழ்வில் பிரெஞ்சு மொழி (francophone) கலைஞரான சாரா டுஃபோர், ‘லெஸ் கவ்பாய்ஸ் ஃபிரிங்கன்ட்ஸ்’ குழுவின் “லா ரெயின்” (La Reine) பாடலையும், ஆங்கில மொழி (anglophone) கலைஞரான டைலர் ஷா, ராஃபியின் “லைக் மீ அண்ட் யூ” (Like Me and You) பாடலையும் பாடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் அரசவைக் கவிஞரான (Poet laureate) சிம்வெம்வே உண்டி (Chimwemwe Undi), இந்த விழாவிற்காகவே தாம் எழுதிய “ரீசன்ஸ்” (Reasons) என்ற கவிதையை வாசிப்பார். அந்தக் கவிதையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை ஒட்டாவாவிலுள்ள லூயிஸ் ஆர்பர் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வாசிப்பார்.
இந்த விழாவின் போது, கவர்னர் ஜெனரலாக நாட்டு மக்களுக்கு லூயிஸ் ஆர்பர் தனது முதலாவது உரையை நிகழ்த்துவார். அதில் அவர் தனது பதவிக்காலத்திற்கான முன்னுரிமைகள் குறித்து விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மார்க் கார்னியும் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.
செனட் சபையிலுள்ள அரியணையில் லூயிஸ் ஆர்பர் ஏறும் போது, நாடாளுமன்றக் குன்றிலிருந்து (Parliament Hill) 21 குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்படும்.
அதே நேரத்தில், கனேடிய ஆயுதப் படைகளின் மத்திய இசைக்குழுவினர் “காட் சேவ் தி கிங்” (God Save the King) என்ற வாழ்த்துப் பாடலை இசைக்க, பீஸ் டவரில் (Peace Tower) கவர்னர் ஜெனரலின் கொடி ஏற்றி வைக்கப்படும்.
ஒரு சிறந்த முன்னாள் சட்ட நிபுணரான லூயிஸ் ஆர்பர், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். அவர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராகவும், தி ஹேக் (The Hague) சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
79 வயதான ஆர்பர், முன்னாள் யுகோஸ்லாவியா மற்றும் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் தலைமை வழக்கறிஞராக இருந்தார். பதவியில் இருந்த ஒரு நாட்டின் தலைவரான செர்பிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசெவிக் (Slobodan Milosevic) மீது மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முதன்முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவர் வரலாறு படைத்தார்.
மொண்ட்ரியலை (Montreal) பூர்வீகமாகக் கொண்ட இவர், 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கை (Genocide Convention) உருவாக்கப்பட்ட பிறகு, முன்னாள் ருவாண்டா மேயர் ஒருவருக்கு எதிரான வழக்கில் இனப்படுகொலைக்கான முதல் தண்டனையைப் பெற்றுத் தந்தார்.
மேலும், பாலியல் வன்புணர்வுகளை மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தவரும் இவரே ஆவார்.
2022 இல் மன்னர் சார்லஸ் அரியணை ஏறிய பிறகு, அவர் ஒப்புதல் அளித்த முதல் கவர்னர் ஜெனரல் நியமனம் இதுவாகும். லூயிஸ் ஆர்பர் கடந்த வாரம் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸைச் சந்தித்துப் பேசினார்.
கனேடிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகச் செயல்படுவதும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் கவர்னர் ஜெனரலின் கடமையாகும்.
அமைச்சரவை அமைச்சர்களுக்குப் பதவப்பிரமாணம் செய்து வைப்பது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மற்றும் கலைப்பது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் நியமனங்களை மேற்கொள்வது மற்றும் மசோதாக்களைச் சட்டமாக்குவதற்கு அரச அங்கீகாரம் (Royal Assent) வழங்குவது ஆகியவை கவர்னர் ஜெனரலின் உத்தியோகபூர்வ பணிகளில் அடங்கும்.
மேரி சைமன் ஆற்றிய சேவைக்காக கனடா நன்றிக்கடன் பட்டுள்ளது என்றும், பூர்வகுடி மக்களின் நல்லிணக்கத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி என்றும் பிரதமர் மார்க் கார்னி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்