இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், கனடாவின் டொரன்டோ நகரை வந்தடைந்துள்ளார். கனடாவில் 30 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றி வரும் உதயன் ஊடகக் குழுமத்தின் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உதயன் ஊடகம் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் தமிழ் ஊடகச் சேவையை முன்னெடுத்து வருவதுடன், கடந்த 20 ஆண்டுகளாக ஊடக விருதுகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், அந்நிறுவனத்தின் பங்களிப்பை உயர்வாகப் பாராட்டினார்.
இன்றைய சூழலில் கையில் கைப்பேசி இருந்தாலே அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறியுள்ளார்கள். அச்சு ஊடகங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு ஊடகங்கள் மங்கிச் செல்லும் காலகட்டத்தில், உதயன் போன்ற ஊடகங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக சேவையாற்றுவது அளப்பரிய சாதனையாகும். இது கனடியத் தமிழ் சமூக வரலாற்றின் முக்கிய அத்தியாயமாகும் என அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் குறித்து கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
உழைப்பால் உயர்ந்த ஆற்றல்மிக்கதாக வளர்ந்துள்ள கனேடிய தமிழ்ச்சமூகம் இலங்கையில் தங்கள் நிதியையும் ஆற்றலையும் பயன்படுத்தி மக்கள் நலனோடு இணைய வாருங்கள். இதே போன்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க செய்யத் தவறுவாரேயானால் சிக்கல் ஏற்படும். அநுர தமிழர்களுக்கு அதிக உரிமைகளை வழங்கிவிட்டால் சிங்கள இனவாதம் மேலோங்கிவிடும் என்று பயப்படக் கூடாது.
இளம் சொல்லிசைப் பாடகர் சங்கீத் தம்பியை தமிழீழ விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து பாடிவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்து வைத்திருக்கின்றார்கள் பயங்கரவாதச் சட்டத்தை விரட்டியடிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.
இந்தச் செய்கை தமிழ்த் தேசியக்கட்சிகளதும் மக்களதும் அநுர அரசின் மீதான நம்பிக்கையை உடைந்துவிட்டது. வடக்கில் அநுரவின் அரசைச் சேர்ந்தவர்கள் ஒருமேடையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரின் தாயாரையும் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையும் புகழ்ந்து சிலாகித்து நெகிழ்ந்து ஒரு விழா நடாத்தினார்கள். அதை தமது கட்சிப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்கள். அப்படியென்றால் தமிழீழம் சார்பான பாடலைப் பாடிய தம்பி சங்கீத்தைக் கைது செய்ய வேண்டுமென்றால் அதற்கு முன் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களை கைது செய்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் ஆட்களைத் தெரிவுசெய்து சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யக் கூடாது.
ஜனாதிபதி அநுர புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் பொறுமையைச் சோதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் தமிழ்க்கட்சிகளைத் தாண்டி வந்து உங்களைத் தெரிவு செய்திருக்கின்றார்கள். இதை நீங்கள் பயன்படுத்தத்தவறினால் அது வரலாற்றுத் தவறு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்துள்ள உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவன் நானாக இருக்கிறேன். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எனது நீண்டகால நண்பர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் அரசியல் நட்பு இருந்து வருகிறது. இன்று அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராகவும், நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவும் உள்ளோம். தனது நண்பன் இலங்கை ஜனாதிபதியின் அரசாங்கம் தேசிய ரீதியில் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்த அவர் சிங்கள மொழியிலும் மேற்குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
“இன்று இலங்கையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தை விட அதிகம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக உள்ளார். ஆளும் தரப்பில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் பலரின் பெயர்களைக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஜனாதிபதியின் பெயர் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது”
ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில் பல முக்கிய விடயங்கள் தாமதமாகியுள்ளன. தமிழ் மக்களிடம் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை வடக்கு கிழக்கிலே வெற்றி பெறுவதற்கு பல உறுதி மொழிகளைத் தந்தார். ஈழத்தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளை விட அதிக வாக்குகளை அநுர அரசுக்கு வழங்கியது. நாட்டில் பயங்கரவாதச் சட்டத்தை நீங்குவோம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அது நீக்கப்படவில்லை மாறாக வேறொரு விதத்தில் மக்களுக்குள் புகுத்தப்பட்டுள்ளது. நான் இங்கே பேசுவது புலனாய்வுப்பிரிவின் ஊடாக அரசின் காதுக்குப்போகும் என்பதும் எனக்குத் தெரியும் என்றார்.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. காணி பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. இவை குறித்து நான் ஜனாதிபதியிடம் நேரடியாகக் கூறியுள்ளேன். மீண்டும் கனடா மண்ணிலிருந்தும் அவற்றை நினைவூட்டுகிறேன் என்றார்.
“நாங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் மக்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை மக்கள் அறிய வேண்டும். முன்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இன்று அதே IMF திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்”
1987ஆம் ஆண்டு இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரித்தது ஜே.வி.பி.யின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாக இருந்ததாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், “வரலாற்றை மாற்ற முடியாது. இன்று தேசிய மக்கள் சக்தி (NPP) பல கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளது. அதுபோல தேசிய இனப் பிரச்சினை தொடர்பான அணுகுமுறைகளிலும் மாற்றம் தேவை” என்றார்.
இங்கே உள்ள பெரியவர்கள், பொருளாதாரத்தில் வளர்ந்தவர்கள் நாட்டுக்கு வந்து உதவிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். கட்டமைப்புக்கள் ரீதியாக கனடாவில் உழைப்பால் உயர்ந்த உங்களது அனுபவம் ஆற்றல், செல்வம் அனைத்தும் கணிசமான அளவில் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றார்.