கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு “பேரழிவு” (Disaster) ஆக அமையும் என ஒன்டாரியோ (Ontario) மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். அல்பெர்ட்டா மாகாணத்தை தனியாகப் பிரிப்பது தொடர்பான சாத்தியமான வாக்கெடுப்பு ஒன்று எதிர்வரும் இலையுதிர்காலத்தில் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அறிவித்ததைத் தொடர்ந்தே டக் ஃபோர்ட் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ‘சால்ட் ஸ்டே. மேரி’ (Sault Ste. Marie) பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த டக் ஃபோர்ட், அல்பெர்ட்டா மாகாணம் கனடாவை விட்டு வெளியேறுவதை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன், முதல்வர் டேனியல் ஸ்மித்தின் இந்த முன்மொழிவானது, அவரது அரசியல் தளத்தின் (Political base) ஒரு பகுதியினரைக் கவருவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கனடாவிலிருந்து அல்பெர்ட்டா பிரிந்து செல்வது குறித்து, அரசியலமைப்பு ரீதியான உத்தியோகபூர்வ பொதுவாக்கெடுப்பு (Binding referendum) ஒன்றை நடத்துவதற்கான சட்டரீதியான செயல்முறைகளை மாகாண அரசு ஆரம்பிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து, எதிர்வரும் அக்டோபர் 19ஆம் திகதி அல்பெர்ட்டா மக்கள் வாக்களிக்கவுள்ளனர் என மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
இதேவேளை, முதல்வர் டக் ஃபோர்ட்டுடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த கூட்டாட்சித் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) கருத்துத் தெரிவிக்கையில், பலமான கனடா என்பது பலமான அல்பெர்ட்டா மாகாணத்திலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன் மாகாணங்களுக்கும் மத்திய (கூட்டாட்சி) அரசாங்கத்திற்கும் இடையில் சுமுகமான ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஒட்டாவாவிலுள்ள நாடாளுமன்றக் கட்டட மறுசீரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்த பிரதமர் மார்க் கார்னியும் (Carney) இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்டார். கனடா என்றும் “உலகின் மிகச்சிறந்த நாடாகவே” விளங்கும் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டை மேலும் பலப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அல்பெர்ட்டா மாகாணத்துடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்