வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் சனிக்கிழமை (23) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
இணையச் சட்டம், எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துதல், சிவில் வழக்குகளில் மின்னணு ஆதாரங்களின் ஏற்புத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்க உரைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரத்ன மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பிரபாகரன் ராமச்சந்திரன், யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளிந்த டில்ருக் ஆகியோர் வளவாளர்களாக இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.