கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய 7 பிரதான மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க:
“2025 ஆம் ஆண்டில் இலங்கையர்கள் 34 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டது. இதற்கு மேலதிகமாக, இந்தியாவில் இருந்து தொழிலாளர்களாக வருபவர்கள் நீண்டகாலம் இலங்கையில் தங்கியிருக்கிறார்கள். அவ்வாறு வேலைக்காக வந்தவர்களைப் பரிசோதித்தபோது, அவர்களில் 34 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி, கடந்த ஆண்டில் மொத்தம் 68 நோயாளிகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருந்து யானைக்கால் நோயை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, இலங்கையில் ஒரு நோயாளி கூட இல்லாத நிலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்நோய் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.” எனத் தெரிவித்தார்.