பொலிஸார் தாங்களும் பௌத்தர்களாக இருப்பதால், பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணையின் போது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். விசாரணைக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது:
பொலிஸார் நீதிமன்றில், விகாரை பகுதிக்குள் உள்ள பிரதேச சபை வீதியை மீட்டால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் வீதியை சட்டவிரோதமாக கைப்பற்றி வேலி அடைத்து வைத்திருப்பவர் விகாராதிபதியே. அதை மீட்க பிரதேச சபை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தது.
“இங்கே சமாதான சீர்குழைவை யார் ஏற்படுத்துவார்கள்? நான் தான் சமாதான சீர்குழைவை ஏற்படுத்துவேன் என்பது போல் விகாராதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்” என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பொலிஸார் சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
“இது சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையாகும். பொலிஸாரும் பௌத்தர்களாக இருப்பதால் பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர்” என்று கடுமையாக சாடினார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.