நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை தற்போதைய அரசாங்கம் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி கடந்த கால ஆட்சியாளர்களின் தோல்வியுற்ற திட்டங்களையே மீண்டும் திணிக்க முயற்சிக்கிறது. பழைய பாடத்திட்டத்தால் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் பாராளுமன்ற கல்விச் சீர்திருத்தக் குழு கூடி புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியுள்ளது. ஆனால், இந்தப் புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்போது பாரிய சிக்கல்கள் எழும் என்பது வெளிப்படையானது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவை அல்ல. இவை கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கலாநிதி உபாலி சேரசிங்க போன்றவர்களால் திட்டமிடப்பட்ட பழைய ஆவணங்களாகும். இதையே தற்போதைய அரசாங்கம் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப் பார்க்கின்றது.
கடந்த அரசாங்கத்தின் திட்டத்தின்படி, இந்தச் சீர்திருத்தங்கள் முறையாகச் செயல்பட்டிருந்தால் 2027 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் சாதாரண தரப் பரீட்சையும், 2028 இல் உயர்தரப் பரீட்சையும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அரசின் திட்டமிடல் குறைபாட்டால் இவை 2029 மற்றும் 2033 ஆம் ஆண்டுகள் வரை பின் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்த 6 ஆம் தரத்துக்கான புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண தரப் பரீட்சை 2030 ஆம் ஆண்டுக்கும், உயர்தரப் பரீட்சை 2034 ஆம் ஆண்டுக்கும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பாடத்திட்டம் ஒவ்வொரு எட்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2023 இல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. இதனால் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் காலாவதியான பாடத்திட்டங்களையே கற்று வருகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் 2015 ஆம் ஆண்டுக்குரிய தரவுகளையே கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எமது நாட்டு மாணவர்கள் இன்னும் பழைய விடயங்களையே படித்துக் கொண்டிருப்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாரிய அளவில் பாதிக்கும்.
பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழி மூலக் கல்விக்கு அதிகத் தேவை உள்ளது. இதன் காரணமாகவே பலரும் அரச பாடசாலைகளை விடுத்துத் தனியார் பாடசாலைகளை நோக்கிச் செல்கின்றனர். 2002 ஆம் ஆண்டு கலாநிதி தாரா டி மெல் கல்வி அமைச்சின் செயலாளராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட இருமொழி கல்வித் திட்டம் இன்று ஆசிரியர் பற்றாக்குறையாலும் முறையான கண்காணிப்பு இல்லாமையாலும் முழுமையாகச் சீர்குலைந்துள்ளது.
ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்குவதற்கான முறையான பயிற்சிகள் தற்போது வரை ஆரம்பிக்கப்படவில்லை. இன்று ஒரு ஆசிரியப் கலாசாலையில் பயிற்சியை ஆரம்பித்தால் கூட, அவர்கள் வெளியேற இன்னும் மூன்று ஆண்டுகள் எடுக்கும். அப்படியென்றால் 2030 வரை ஆங்கில மொழி மூல ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கப்போகின்றது. இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களால் எவ்விதப் பயனும் இல்லை.
அரச பாடசாலைகளில் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்து வருவதால், பெற்றோர்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளைத் தனியார் பாடசாலைகளிலும், பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டும் மேலதிக வகுப்பு வர்த்தக அமைப்புகளிடமும் தஞ்சம் புகச் செய்கின்றனர். வினாத்தாள்களை மையமாகக் கொண்ட ஒரு கல்வி முறையே இங்கு காணப்படுகின்றது. பாடசாலைக்குச் செல்லாமல் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றால் மட்டுமே பரீட்சையில் சித்தியடைய முடியும் என்ற மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, வெறுமனே கூட்டங்களை நடத்தி மொடியூல் முறைகளை அறிமுகப்படுத்துவதால் மட்டும் கல்வியை மேம்படுத்த முடியாது. 1947 ஆம் ஆண்டு சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்களால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் இன்று சிதைக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகக் கல்வியைப் பயன்படுத்தாமல், மாணவர்களின் உண்மையான எதிர்காலத் தேவைகளையும், நவீன உலக மாற்றங்களையும் கருத்திற் கொண்டு புதிய தேசியக் கொள்கையொன்றை வகுக்க வேண்டும் என்றார்.