திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள் வாக்களித்த ‘முறைமை மாற்றத்திற்கு’ (System Change) விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
“இந்த தன்னிச்சையான நடவடிக்கை, நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் மிகவும் முக்கியமான நாடாளுமன்றத்தின் ‘தணிக்கை மற்றும் சமநிலை’ (Checks and balances) முறைமை மீதான மரியாதையின்மையை காட்டுகிறது. [இதன் காரணமாகவே 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, கோப் குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்குகிறார்].
இது மக்கள் வாக்களித்த முறைமை மாற்றத்தை அவமதிக்கும் செயலாகும். அத்துடன், ஆளுமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறும் செயலுமாகும். அடுத்த வாரம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதால், அதன் பிறகு தாம் வர முடியும் என அவர் சாக்குப்போக்கு கூறுகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தொடர்பற்றது,” என ஹர்ஷ டி சில்வா தனது X (முன்னர் ட்விட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
“காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாளை அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது என்று திறைசேரி செயலாளர் இப்போது எனக்குத் தெரிவித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் இலங்கையின் அரசியலமைப்பு பொது நிதி மீதான முழுமையான கட்டுப்பாட்டை நாடாளுமன்றத்திடம் வழங்கியுள்ளது. நிலையியற் கட்டளைகளின்படி, கடன் மறுசெலுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களைக் கண்காணிப்பதில் கோப் குழுவிற்கு நேரடிப் பொறுப்பு உள்ளது. எனவே, அவர் அழைக்கப்படுவது குழுவின் விருப்பத்திற்குரிய ஒரு செயலல்ல, அது குழுவின் அரசியலமைப்பு ரீதியான கடமையாகும்.”
“குழுவின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவர் மீது ஏதேனும் தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தால், உண்மையை விளக்குவதற்கு அவருக்கு இது ஒரு சந்தர்ப்பமாகும். அவர் ஏன் ஓடி ஒளிக்கிறார்? மறைப்பதற்கு என்ன இருக்கிறது? தற்போதைய திறைசேரி செயலாளர் என்ற வகையில் அவருக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அவர் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், அல்லது அவரால் முடியாவிட்டால், அந்தப் பொறுப்பை நிறைவேற்றக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.