மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் வருகைதரும் பருவம் நெருங்கி நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்களையே நாடுகின்றனர். இந்த விமானங்கள் மேற்காசியாவின் முக்கிய இடைவழி மையங்கள் வழியாக இயக்கப்படுவதால், அந்த பிராந்தியத்தில் ஏற்படும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி இடையூறுகள் பயணிகளின் வருகையை நேரடியாகப் பாதித்துள்ளதாக ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஏப்ரல் மாத இறுதியில் மொத்த வருகை சுமார் 120,000 ஆக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட சுமார் 54,000 குறைவான வருகையாகும்,” என பிரதி அமைச்சர் மேலும் விளக்கியுள்ளார்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் தொடர்வது, நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.