மதுரை,
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) காவல் மரண வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி சி.பி.ஐ. தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த இருவரை, எந்தக் குற்றப்பின்னணியும் இல்லாத நிலையில், இரவு முழுவதும் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்றது மன்னிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டு, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கு மரண தண்டனை விதித்தது. சட்ட விதிமுறைப்படி, கீழ் நீதிமன்றம் விதிக்கும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதால், சி.பி.ஐ. இந்த முறையீட்டைச் செய்துள்ளது.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தபடி 9 குற்றவாளிகளும் காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, முதல் குற்றவாளியான முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தானே நேரில் வாதிட விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “முதலில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
#SathankulamCase #JusticeForJayarajBennix #CBI #MaduraiHighCourt #DeathPenalty #PoliceCustodyDeath #HistoricVerdict #SathankulamVerdict #HumanRights #BreakingNews #TamilNaduPolice #JusticeServed #LegalUpdate #MaduraiBench #JayarajBennixCase #CriminalJustice