விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு அரசியல் கட்சிகள் அல்ல மாறாக படக்குழுவின் அஜாக்கிரதை காரணம் என்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண். இல்லை என்றால் வேண்டுமென்றே லீக் செய்திருக்கலாம் என்கிறார். மேலும் அந்த நபரை கண்டுபிடிக்கும் வழியையும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் படத்தை கசியவிட்டது யார் என்பது தான் தற்போது சினிமா ரசிகர்கள் தீவிரமாக விவாதிக்கும் விஷயம். இந்நிலையில் ஒரு திரைப்படம் ரிலீஸுக்கு முன்பு சாட்டிலைட் கன்ட்ரோலில் இருக்கும் என்றும், அந்த சாட்டிலைட் பாஜக கன்ட்ரோலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.
ஆன்லைனில் உயர் தரத்தில் கசிந்திருக்கும் ஜனநாயகன் பட ப்ரிண்ட்டில் எட்டிடிங் குறியீடு இருக்கிறது என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து இந்த கசிவுக்கு எந்த கட்சியையும் கை காட்ட முடியாது என்கிறார்கள். இந்நிலையில் 2017ம் ஆண்டு ரிலீஸான நிசப்தம் படத்தை இயக்கிய மைக்கேல் அருண் ஜனநாயகன் கசிவு பைரஸி இல்லை என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் கசிவுக்கு அந்த டீமின் அஜாக்கிரதையே காரணம் என்கிறார் மைக்கேல் அருண். கசிந்த ப்ரிண்ட்டில் EDIT_REF 14012026 என்று இருப்பது எடிட்டர் 14-01-2026 அன்று உருவாக்கிய அவுட்புட் என்றும், அது கசிந்திருந்தால் அது படக்குழுவின் அஜாக்கிரதை மட்டுமே என்கிறார் அவர்.
ஒரு கன்னட மாஸ் ஹீரோவின் இரண்டு படங்களில் இணை இயக்குநராக வேலை செய்தாராம் மைக்கேல் அருண். இணை இயக்குநராக இருந்தபோது ஃபுட்டேஜ்களை டிஜிட்டல் முறையில் லேப்டாப் மூலம் வேலை செய்ய வேண்டியிருக்குமாம். சிஜி, டப், ஆர்ஆர், டிஐ,மிக்சிங் செக், சிஜி செக், ஃபைனல் ஃபிலிம் செக் செய்ய பல முறை ஃபுட்டேஜை ஆக்சஸ் செய்ய வேண்டி முழு ஃபுட்டேஜும் கையில் இருக்கும்போது எல்லாம் நெருப்பு மீது இருப்பது போன்று இருக்கும்.
எல்லா வேலையையைும் முடித்து அந்த ஃபுட்டேஜை அழித்த பிறகே மூச்சு வந்து இயல்பு நிலைக்கு வருவோம். ஃபுட்டேஜ் ஆக்சஸ் செய்யும் அந்த படத்தில் வேலை செய்யும் அனைவருக்குமே இந்த மனநிலை தான் இருக்கும். கோடிகளில் முதலீடு செய்ததுடன், பலரின் உழைப்பு அடங்கியிருக்கே. இதில் அஜாக்கிரதையாக இருந்தால் பெரும் இழப்பு என்கிறார் மைக்கேல் அருண்.
அதை அரசியலாக பார்க்க முடியாது. இதற்கு முழுக்க முழுக்க யாருடைய அஜாக்கிரதை அல்லது படம் மூலம் சொல்ல விரும்பிய கருத்துகளை குறித்த நேரத்தில் சொல்ல முடியாமல் போகின்றதால் அதை லீக் செய்து மக்களிடம் கொண்டு செல்ல முற்படுவதாக தான் பார்க்க முடிகிறது.
அவுட்புட் தேதியை வைத்து விசாரித்து குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். அந்த படத்தை யாரும் டவுன்லோடு செய்து பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இது தேர்தல் களம் என்பதால் கோரிக்கைக்கு எல்லாம் மதிப்பு இருக்கிறதா என்று சொல்ல முடியாது. ஃபுட்டேஜ் குறியீட்டை வைத்து அது யார் மூலம் கசிந்திருக்கும் என்பதை தயாரிப்பாளரும், படக்குழுவும் விசாரணை நடத்தி மக்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டிய நிலை.
இது அரசியலாக்கப்பட்டதால்…உண்மை வெளியே வருகிறதா என பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் மைக்கேல் அருண்.