அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனைத் தாக்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன வள திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு காடழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இவை அதிகாரிகள் இலட்சம் பெற்றுக்கொண்டு செய்வதாக குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் சட்டவிரோத மணல் மாபியாக்கள் மரக்கடத்தல்காரர்களால் இவ்வாறு மது விருந்துகளும் ஏற்பாடு செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.
மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரண்டு வாகனங்களும் சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சென்ற போது மதுபோதையில் நின்ற மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளருடன் முரண்பட்ட தோடு மாத்திரமின்றி ஊடகவியலாளரை தாக்கவும் முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதோடு அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தும் செயற்பாட்டை முன்னெடுத்தது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும் ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்டது. இதனைவிட வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் ஊடகவியலாளரை மாங்குளம் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர் வன வள திணைக்கள அதிகாரிகளிடம் எதுவுமே பேசாது ஊடகவியலாளரை மாத்திரம் அழைத்து கடும் தொனியில் மிரட்டும் வகையில் தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீரோ எனவும் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி அச்சுறுத்தி விட்டு பிரச்சினைகள் போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன் என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.
இதனைத் தொடர்ந்து வேறு ஒரு பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டினை பதிவு செய்தார் அவரிடம் மதுபோதையில் அதிகாரிகள் உள்ளனர் அதனை பரிசோதனை செய்யுமாறு கோரிய போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி மதுபோதையில் நின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது ஊடகவியலாளர் மீது பொலிசார் மிரட்டல் விடுத்தமையானது இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர் இதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியதோடு குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மாவட்ட செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ். ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்களிடம் முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.