கனடாவில் உள்ள முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது பயணக் கட்டணங்களை (Airfares) உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த இயக்கச் செலவில் (Operating costs) எரிபொருள் செலவு சுமார் 25% முதல் 30% வரை வகிக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், நிறுவனங்களுக்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரானுடனான போர் அச்சுறுத்தல் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது விமானங்களுக்கான ‘ஜெட் எரிபொருள்’ (Jet fuel) விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது.
வசந்த மற்றும் கோடைகாலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிறுவனங்கள் மேலதிக கட்டணங்களை (Fuel surcharges) விதிக்கத் தொடங்கியுள்ளன.
ஏர் கனடா (Air Canada) மற்றும் வெஸ்ட்ஜெட் (WestJet) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கட்டண அமைப்புகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. உள்நாட்டுப் பயணங்களை விட சர்வதேசப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகளவில் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“விமான நிறுவனங்களால் இந்த அதீத எரிபொருள் விலை உயர்வைத் தாங்களாகவே ஈடுகட்ட முடியாது. எனவே, அந்தப் பாரத்தைச் சுமையாகப் பயணிகள் மீது சுமத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை,” என விமான போக்குவரத்துத் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கனடியர்களுக்கு, இந்த விமானக் கட்டண உயர்வு மேலதிக சுமையாக அமையும் என அஞ்சப்படுகிறது.