நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வியாழக்கிழமை (02) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தின் கொள்கையானது, மற்றவர் பையைத் திருடிவிட்டு ‘திருடன் திருடன்’ என கத்திக்கொண்டு ஓடும் ஒரு பிக்பொக்கெட் திருடனின் செயலைப் போன்றது. நிலக்கரி மோசடியுடன் தொடர்புடையவர்களை ஜனாதிபதி பாதுகாக்கின்றார். ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் நகர்வுகளைப் பார்க்கும்போது, அவரே இந்த மோசடியின் பின்னணியில் இருப்பது தெளிவாகிறது.
தற்போதைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர், ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்குக் கொண்டுவரப்பட்டவர்;, அவர் மீது ஏற்கனவே மோசடி குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், அரச ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை. விவசாயிகள் அறுவடை செய்யும் நேரத்தில் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை அழிக்கும் செயலாகும் என்றார்.
அரசாங்க தரப்பினர் அண்மைக் காலமாக மத வழிபாடுகளில் ஈடுபடுவது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மதத்தை நம்பாதவர்கள், மகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மற்றும் தானம் வழங்குவதை ஒரு நாடகமாகப் பார்த்தவர்கள், இன்று புதிய வீட்டிற்குச் செல்லும்போது தானம் வழங்கி மதச் சடங்குகளில் ஈடுபடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதுவே பௌத்த தர்மத்தின் சக்தி, என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.