இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரானது, பெங்களூருவில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் சனிக்கிழமை (28) இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்வதுடன் ஆரம்பிக்கின்றது.
முதற் கட்டமான ஏப்ரல் 12ஆம் திகதி வரையிலான போட்டி அட்டவணையே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 19ஆவது ஆண்டாக நடைபெறும் ஐ.பி.எல்லானது இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் இரசிகர்களுக்கு திருவிழாவாகவே அமையப் போகின்றது.
ஈரானியப் போருக்கு மத்தியில் நல்லதொரு கவனக்கலைப்பானாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் இருக்கப் போகின்றது. எவ்வாறெனினும் போர் நீடித்தால் மின்வெட்டுகள் மற்றும் கடலடி கேபிள்கள் தாக்கப்பட்டால் ஏற்படும் தொடர்பாடல் துண்டிப்பு அச்சமும் இருக்கவே செய்கின்றது.
ஆரம்பப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் ஹேசில்வூட்டும் தொடர் முழுவதும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாலும் இல்லாத நிலையானது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரானது கிண்ணத்தை தக்க வைப்பதில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும். புவ்னேஷ்வர் குமாருடன் இணைந்து ஹேசில்வூட்டை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபியும் தயாலை புதுமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மக்னேஷ் யாதவ்வும் அணியில் பிரதியிடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அணித்தலைவர் ரஜாட் பட்டிடாரின் அண்மைய போர்மானது கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் இங்கிலாந்தின் சகலதுறைவீரர் ஜேக்கப் பெத்தெல்லின் வரவு அனுகூலமளிக்கிறது. மீண்டுமொரு முறை இந்த றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக க்ருனால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா ஆகியோர் காணப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டைப் போலவே விராட் கோலியின் இனிங்ஸ்கள் முக்கியமானவையாகவே காணப்படுகின்றன.