சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ராயல் மாஸ் எரீனா வளாகத்தில் பிரபல ஒப்பனை கலைஞர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட “CJ Royal New Year Prince & Princess – 2026” அழகிப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் ஒரு அங்கமாக, குறித்த இளம் பெண் உயிருள்ள மலைப்பாம்பு ஒன்றை வைத்து நடனமாடியுள்ளார்.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 30 (1) (f) பிரிவின் கீழ், பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமான மலைப்பாம்பை (Python molurus) காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறித்த பெண் அந்த மலைப்பாம்பை புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா வாடகைக்கு பெற்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அதனை மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் மலைப்பாம்பை வாடகைக்கு வழங்கிய நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பெல்லன்விலவில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருவதோடு, இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.