புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும், ஆக்கபூர்வமான ஆசிரியர்களுக்கு விசேட வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பல இன, மும்மொழிக் கல்விப் பாடசாலையின் ஆரம்ப விழாவில் பங்கேற்றுப் பேசும்போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கல்வி மாற்றத்திற்கான வேலைத்திட்டத்துடன் இணைந்து, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலமும், புதிய கற்பித்தல் அணுகுமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் இந்திய அரசாங்கத்துடனான இந்த ஒத்துழைப்பு இலங்கையின் கல்வி முறையை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.