யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் கடந்த 15 வருடங்களாகச் சேவையாற்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவிய Cath Lab இயந்திரம் நேற்றுடன் (சனிக்கிழமை) தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றது.
2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலிருந்த இந்த இயந்திரம், சுமார் 40,000-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்குச் சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காக்கப் பேருதவியாக இருந்தது.
சிகிச்சைகள்: இதய இரத்தக் குழாய் அடைப்புகளைக் கண்டறியும் Angiogram, அடைப்புகளை நீக்கும் Angioplasty, இதய வால்வு திருத்தங்கள் மற்றும் Pacemaker பொருத்துதல் போன்ற சிக்கலான சிகிச்சைகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ஓய்வுபெற்ற இயந்திரத்திற்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய Cath Lab இயந்திரத் தொகுதியை வழங்கச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இம்மாத இறுதிக்குள் நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
புதிய இயந்திரம் செயல்பாட்டிற்கு வரும் வரை, இதய நோயாளர்களுக்கான அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க வைத்தியசாலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது குறித்துப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்:
“புதிய இயந்திரம் வரும் வரை, வைத்தியசாலையில் உள்ள DSA இயந்திரம் மூலமும், வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள Cath Lab பிரிவு மூலமும் சிகிச்சைகளைத் தடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”
இந்த இயந்திரத்தை இத்தனை காலம் சிறப்பாகப் பராமரித்துச் சிகிச்சையளித்த இதய சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கவியலாளர்கள் மற்றும் தாதியர்களுக்குப் பணிப்பாளர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.