2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
புதிய பல் சிகிச்சையுடன் தொடர்புடைய தொழிநுட்பம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் செயற்கை அவயவங்கள் தொடர்பான அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (9) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில்,
2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்தவர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை மாற்றியமைத்து, அவர்களுக்கு மீண்டும் ஓய்வூதிய உரிமையை பெற்றுக்கொடுக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் உரிய தகுதியுள்ளவர்களைக் முறையான பயிற்சிகளுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரச ஊழியர்களுக்கு உயரிய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், எதிர்வரும் ஜனவரி முதல் அதனை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன், அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சொத்துக்கடன்களுக்கான வட்டிச் சலுகைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திறைசேரி மற்றும் அரசாங்கத்தின் ஊடாக அரச சேவைக்கு வழங்கக்கூடிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்த ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தத் துறைகளை மேம்படுத்துவதோடு, இவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம் என்றார்.