2008-2009ம் ஆண்டுகளில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை மீண்டும் பிரதிவாதியாக இணைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்த சந்தேக நபரான லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆராச்சிக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வசதி செய்து கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரியுமான ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவிக்க 2020 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் அனுமதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2021 இல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டு, அவர் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு (நேவி சம்பத்) அடைக்கலம் கொடுத்ததாக விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் 2018 நவம்பரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், டிசம்பர் 2018 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல நிதியுதவி செய்ததாகவும், விசாரணைகளில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அப்போது குற்றம் சாட்டியிருந்தது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, இரண்டாவது சந்தேக நபர் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகளைச் செய்திருந்தார். லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கும் உதவியதாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அத்மிரல் விஜேகுணரத்ன விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னைய நீதவான் வழங்கிய விடுவிப்பு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் குறித்து நீண்ட விசாரணை நடத்திய கௌரவ நீதவான் நீதிமன்றம், அந்த விடுவிப்பு உத்தரவில் குறைபாடுகள் உள்ளதாகத் தீர்மானித்தது. இதன்படி, ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் ஒரு சந்தேக நபராக (பிரதிவாதியாக) பெயரிட்டு, அவருக்கு எதிரான உரிய குற்றப்பத்திரிகைகள் மற்றும் முறைப்பாடுகளைத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
திறந்த நீதிமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை விரிவாக அறிவித்த நீதவான், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.