இலங்கையில் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்) நீண்டகாலத் தலைவராக இருந்த ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ஷம்மி சில்வாவுக்குப் பதிலாக முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவின் ஊடாக நியமிக்கப்பட உள்ளதாக ‘டெய்லி மிரர்’ தெரிவித்துள்ளது.
வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக வாக்கு வேட்டை மற்றும் அரசியல் ஆதரவுடன் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டதாக ஷம்மி சில்வா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதால் ஐ.சி.சி அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைம் ஒரு தனியார் நிறுவனம் என்றும் அதன் நிதி விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் ஷம்மி சில்வா வாதிட்டு வந்தார். இது விமர்சகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஷம்மி சில்வாவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் தனது பதவியையே இழக்க வேண்டியிருந்தது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தணிக்கையாளர் நாயகம் சமர்ப்பித்த நான்கு விசாரணை அறிக்கைகள் அத்துடன் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தயாரித்த அமைச்சரவை உபகுழு அறிக்கை ஆகியவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்திருந்தன.
நிதி முறைகேடுகள் உறவினர்களுக்குச் சலுகை வழங்குதல் மற்றும் சர்வாதிகாரப் போக்கு போன்ற குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில் தற்போது ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். தனது பதவியை விட்டு வெளியேறிய பிறகு ஷம்மி சில்வா பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட விவகாரங்களை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் பொதுமக்களையும் ஊடகங்களையும் எதிர்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.