வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு களவாடப்பட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
அத்துடன் கடந்த சனிக்கிழமை (17) மாலை சந்தேகத்திற்கிடமாக சொகுசு கார் ஒன்று நடமாடுவதாக பொதுமக்களிடம் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடுகள் மற்றும் பொது மக்களின் தகவலுக்கமைய இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாலமுனை பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து வாடகை அடிப்படையில் சொகுசு கார் ஒன்றை பெற்று ஒலுவில் பாலமுனை சம்மாந்துறை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதியோரங்களில் மேய்கின்ற ஆடுகளை சூட்சுமமாக களவாடி வந்துள்ளனர்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட சம்மாந்துறை பொலிஸார் குறித்த காரை பின் தொடர்ந்து கைப்பற்றியதுடன் காரில் இருந்து 4 ஆடுகளையும் மீட்டு, அதில் பயணம் செய்த 28 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைதான இரு சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இருந்து 38 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.அச்சந்தேக நபர் தற்போது தலைமறைவாகி உள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மீட்கப்பட்ட ஆடுகள் சொகுசு கார் மற்றும் 3 சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (18) முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.