மதுரை:
தென்காசி அருகே விவசாயி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சப்-கலெக்டர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது தோட்டத்தில் கள் சோதனை செய்ய வந்த ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, தனது மகன் மணிகண்டனை ஆபாசமாகத் திட்டியதோடு துப்பாக்கியால் காலில் சுட்டதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “விசாரணையின் போது மணிகண்டன் போலீசாரைத் தாக்கியதால், தற்காப்பிற்காகவே போலீசார் சுட்டனர்” என்று தெரிவித்தார். இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சப்-கலெக்டரை காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆஜரான சப்-கலெக்டர், துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக உறுதி அளித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சப்-கலெக்டரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார். அதுவரை இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற இடைக்காலத் தடையையும் நீதிபதி நீட்டித்தார்.
#MaduraiHighCourt #TenkasiNews #PoliceFiring #JusticePugalendhi #FarmersIssues #AlangulamPolice #LegalUpdate #CBIInvestigation #SubCollector #BreakingNews #TamilNaduPolice #HumanRights #MaduraiBench #CourtHearing #TenkasiFarmer #April29