லெத்பிரிட்ஜ் நகரில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஒருவர், காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டதாக லெத்பிரிட்ஜ் காவல்துறை தெரிவித்துள்ளது.
லெத்பிரிட்ஜ் காவல்துறையின் கூற்றுப்படி, 47 வயதான ஜேம்ஸ் ராபர்ட் ஜார்ஜ் மார்டினாக் (James Robert George Martinac), பாலியல் தலையீடு, குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி வரவழைத்தல், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருத்தல், பாலியல் சுரண்டல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து மே 1 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
அன்று காலை, மார்டினாக் ஒரு பொது நூலகத்தில் சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தி குழந்தைகளின் படங்களைப் பார்த்ததை அதிகாரிகள் கவனித்துள்ளனர். இது அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை உத்தரவை மீறும் செயலாகும் என காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள்:
-
சமூக மையங்களுக்கு (Community centres) செல்லக்கூடாது.
-
நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இணையம் அல்லது டிஜிட்டல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது.
-
அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தக்கூடாது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தடை உத்தரவு அவருக்குப் பிறப்பிக்கப்பட்டது.
தடை உத்தரவை மீறியதாக மார்டினாக் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணை விசாரணைக்குப் பிறகு அவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் மே 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.